மலேசியாவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ள நிலையில், 2027 வரவு செலவுத் திட்டத்தில் தேசிய அளவிலான குழந்தைகளுக்கான சத்தான உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளின் வளர்ச்சி குன்றுதலை வாழ்க்கைச் செலவீனப் பிரச்சினையாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு குடும்பமும் ரிங்கிட்டை மிகவும் கவனமாகச் செலவிட வேண்டிய சூழலில், சத்தான உணவுகளே முதலில் தவிர்க்கப்படுவதாகவும் சார்லஸ் சந்தியாகோ குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குழந்தைகளுக்கு சமச்சீர் ஊட்டச்சத்து கொண்ட உணவை வழங்கும் தேசிய உணவுத் திட்டத்தை 2027 வரவு செலவு திட்டத்தின் ஒரு பகுதியாக அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்றும், பண வசதி இல்லாத காரணத்தால் எந்தக் குழந்தையும் ஆரோக்கியமான வளர்ச்சியை இழக்கக் கூடாது என்றும் அவர் விவரித்துள்ளார்.
இதனிடையே, கோலாலம்பூரில் 23.4% குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் சுல்கிஃப்ளி அகமத் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
மேலும், 12.4% குழந்தைகள் எடை குறைவாகவும், 8% குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும், 7.5% குழந்தைகள் அதிக எடையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேவேளையில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குன்றுதல் விகிதம் கடந்த 2011-ஆம் ஆண்டில் 11.3% ஆக இருந்த நிலையில், 2016-ஆம் ஆண்டில் 20.7% ஆக உயர்ந்துள்ளதையும் சார்லஸ் சந்தியாகோ சுட்டிக் காட்டியுள்ளார்.








