தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்காமல், 16-வது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவது சிறந்தது என பாரிசான் நேஷனல் கூட்டணியின் தலைவர் அகமத் சாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
எனினும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் முழுமையான ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்ய முடிவு செய்தாலும், அதற்கும் பாரிசான் நேஷனல் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அம்னோ தலைவருமான சாஹிட், அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்ள பாரிசான் இப்போதே தயாராக வேண்டும் என்றும், மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம், கூட்டணி தொடர்ந்து அரசியல் ரீதியாக பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவடைகின்றது. அதன் பின்னர் 60 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, நாடாளுமன்றம் முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்தால் 16-வது பொதுத்தேர்தலானது அதிகபட்சமாக 2028-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நடைபெற வேண்டும்.
கடந்த 2022-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர் தொங்கு நாடாளுமன்றம் உருவான நிலையில், பாரிசான் உள்ளிட்ட பல கட்சிகளின் ஆதரவுடன் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அமைந்தது.
இதனிடையே, பக்கத்தான் ஹரப்பான் அல்லது பாஸ் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் உடன் இணைந்து செயல்படுவதில் எது சிறந்தது? என்பதை பாரிசான் சாதக, பாதக அம்சங்களை ஆராய்ந்த பின்னரே முடிவு செய்யும் என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.
மேலும், அம்னோ-வின் அடிமட்ட உறுப்பினர்கள் மலாய் அரசியல் ஒற்றுமையை வலியுறுத்தி வருவதாகவும், குறிப்பாக பாஸ் உடனான ஒத்துழைப்புக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிப்பதாகவும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கூட்டணி தொடர்பான எந்த முடிவும் நாட்டின் பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டே அமைய வேண்டும் என்றும் சாஹிட் வலியுறுத்தியுள்ளார்.








