கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், கிளந்தான் போஸ் கோப் பகுதியில் முகாமிட்டிருந்த சுமார் 150 பேரை வயது முதிர்ந்த ஆண் காட்டு யானை ஒன்று நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் மனிதர்–யானை மோதல் குறித்த அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த யானை சுமார் 40 யானைகளைக் கொண்ட ‘ID நெங்கிரி’ கூட்டத்தைச் சேர்ந்ததாக நம்பப்படுவதாக அம்மாநில வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கங்கள் துறையான பெர்ஹிலித்தான் தெரிவித்துள்ளது.
உணவு தேடி இயற்கையான நடமாட்டப் பாதையில் செல்லும் யானைகள் எப்போது வேண்டுமானாலும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரக்கூடும் என்றும் பெர்ஹிலித்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, போஸ் கோப் பகுதியில் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் காட்டு யானைகளை நெருங்கவோ, துரத்தவோ, வாகன சத்தத்தை ஏற்படுத்தவோ அல்லது அவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலம் சீரமைத்தல், தோட்டத் திட்டங்கள் மற்றும் நெங்கிரி அணைத் திட்டம் போன்றவை யானைகளின் வாழ்விடத்தை பாதித்து, அவற்றை குடியிருப்புகளை நோக்கி வரச் செய்யக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.








