குவாந்தான், பிப்ரவரி.28-
கடந்த வியாழக்கிழமை, ரவூப், கம்போங் பாமா கூலாட் பகுதியில் நடந்த தீ விபத்தில், தமது தாய், தந்தை, சகோதரிகள் என ஐந்து பேரை இழந்த இருவரின் நலன் சார்ந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
19 வயதான Ruby Adalia Balqis Mohd Alawi மற்றும் 15 வயதான Ahmad Balia Murqam Mohd Alawi ஆகிய இருவரின் நலன் மற்றும் கல்வியைப் பாதுகாப்பதற்குத் தேவையான உதவிகளுக்கு தாம் பொறுப்பேற்பதாக நேற்று தமது முகநூல் பக்கத்தில் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று காணொளி அழைப்பு வாயிலாக அவர்களுடன் உரையாடிய ஸாஹிட், தமது ஆறுதல்களைக் கூறிக் கொண்டார்.
இந்த துக்கமான நேரத்தில் அவர்கள் தங்களது கவலைகளை மறக்க, தம்முடன் ரமலான் பண்டிகையைக் கொண்டாடவும் அழைப்பு விடுத்துள்ளார்.
Ruby Adalia தற்போது குவாந்தான், கம்பாங் பகுதியிலுள்ள ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியிலும், Ahmad Balia Raub, SMK Dong பள்ளியிலும் கல்வி கற்று வருகின்றார்கள்.
சம்பவம் நடந்த போது, அவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத காரணத்தால் உயிர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.








