கோலாலம்பூர், மே.27-
தைப்பிங் சிறைச்சாலை கலவரத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மனித உரிமைகள் ஆணையமான சுஹாகாம் வெளியிட்டுள்ள அறிக்கையை அரசாங்கம் ஆய்வு செய்து, பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்று அரசாங்கச் செய்தித் தொடர்பாளரும், தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றாலும் கூட, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவைகள் குறித்து அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வழக்கமாக, சுஹாகாமின் ஆண்டு அறிக்கையானது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் என்றும், அதன்படி இந்த விவகாரத்தையும் அரசாங்கம் விரைவில் ஆய்வு செய்யும் என்றும் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஆண்டு, ஜனவரி 17 ஆம் தேதி, தைப்பிங் சிறைச்சாலையில் Hall B இலிருந்து Block E-க்கு கைதிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையின் போது, சுமார் 60 சிறை அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட கைதிகளைக் கடுமையாகத் தாக்கியதாக, சுஹாகாம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஏற்பட்ட கடுமையானத் தாக்குதல் காரணமாக Gan Chin Eng என்ற கைதி உயிரிழந்தார்.
Gan Chin Eng மரணம் தொடர்பாக சிறை அதிகாரி ஒருவர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவுச் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மீதும் குற்றவியல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுஹாகாம் தனது பொது விசாரணைக்குப் பின்னர் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும், தேசிய போலீஸ் படைத் தலைவர் மற்றும் தேசிய சட்டத்துறைத் தலைவரிடம் விளக்கம் கோரியுள்ளார்.








