ஷா ஆலாம், மே,27-
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கை வசதிகள் கொண்ட புதிய அரசாங்க பொது மருத்துவமனை கட்டுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த மே 14-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டரசு மற்றும் மாநில அதிகாரிகள் இணைந்து முன்மொழிந்த நிலத்திற்கே, அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் ஒப்புதல் அளித்துள்ள அந்த இடமானது, மக்கள் எளிதில் அணுகுவதற்கு வசதியாகவும், உள்ளூர் குடியிருப்பாளர்களுக்கு ஏற்ற தூரத்திலும் அமைந்திருப்பதாக அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இந்த புதிய பொது மருத்துவமனையானது, பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா மற்றும் பூச்சோங் பகுதி மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.








