கோலாலம்பூர், மே.27-
சபா ஊழல் விவகாரத்தில் தான் மிரட்டப்பட்டதாக தொழிலதிபர் ஆல்பர்ட் தே முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி முற்றிலும் மறுத்துள்ளார்.
அக்குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், தமக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள போலீஸ் புகார் பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், ஆல்பர்ட் தே உடன் நேரடியான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அஸாம் பாக்கி, தமது வழக்கறிஞர்களும் அவரைத் தொடர்பு கொள்ளவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும், தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணி நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிட்ட ஆல்பர்ட் தே மீது போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தன்னை விசாரணைக்கு அழைத்துள்ள நிலையில், அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அஸாம் பாக்கி உறுதியளித்துள்ளார்.
மேலும், ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்க தனது வழக்கறிஞர்கள் தேவையான ஆவணங்களைத் தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








