காஜாங், மே.27-
மலேசியாவில் அதிக அளவில் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருப்பதாக பொதுமக்களிடையே நிலவும் தவறான கருத்து திருத்தப்பட வேண்டும் என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் வலியுறுத்தியுள்ளார்.
தலைநகர் கோலாலம்பூரில் விடுமுறை அல்லது வார இறுதி நாட்களில் வெளிநாட்டவர்கள் பலர், பொது இடங்களில் ஒன்று கூடுவதைக் காணும் மக்களிடம், அப்படி ஒரு தவறான எண்ணம் உருவாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குடிநுழைவுத் துறை பதிவுகளின்படி, நாட்டில் 30 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டபூர்வமான அனுமதியுடன் உள்ளதையும் டத்தோ ஸாகாரியா சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே, அனைவரையும் சட்டவிரோத குடியேறிகளாகக் கருதுவது தவறான புரிதல் என்று Beranang பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டத்தோ ஸாகாரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.








