ஜன.11
மாமன்னருக்கு 50 கோடி வெள்ளி முதல் 100 கோடி வெள்ளி வரை லஞ்சம் கொடுக்க முயற்சிகள் நடந்ததாக கூறப்படுவது தீய நோக்குடன் கூறப்படும் அவதூறாகும். இது, அறவே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
இது போன்ற பொய்யான குற்றச்சாட்டும், அவதூறும் 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குறிப்பிட்டார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியாக மாமன்னருக்கு 100 கோடி வெள்ளி வரை லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்ததாக கூறப்படுவது நம்பும்படியிலை என்று முகைதீன் தெரிவித்தார்.
இது போன்ற குற்றச்சாட்டை அரசாங்கத்தில் பெரும் பதவிகளில் இருக்கின்றவர் உட்பட பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் வேண்டுமென்றே கட்டவிழ்த்துள்ளனர். இதனை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை என்று முகைதீன் குறிப்பிட்டார்.








