ஜோகூர் பாரு, ஜனவரி.02-
கடந்த வாரம், தனது கணவரைக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட, ஜோகூரைச் சேர்ந்த 46 வயது இல்லத்தரசியும், அவரது காதலர் என்று கூறப்படும் ஆடவரும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
நீதிபதி முஹமட் ஸாமிர் சுஹைமி முன்னிலையில் வாசிக்கப்பட்ட தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்த 46 வயதான பெண்ணும், 39 வயதான ஆணும், விசாரணை கோரினர்.
கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி, இரவு 9.30 மணியளவில், தாமான் ஏஹ்சான் ஜெயாவில் உள்ள வீடு ஒன்றில், 48 வயதான ஜி. குமரேசனை தனது காதலருடன் சேர்ந்து, முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொலை செய்ய முயன்றதாகக் அப்பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டம் பிரிவு 307 இன் கீழும், பிரிவு 34-இன் கீழும் விசாரணை செய்யப்பட்டு வரும் இவ்வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.








