புத்ராஜெயா, ஜூலை.15-
மலேசிய ஊடகவியலாளர் மன்றத்தின் உறுப்பினர்கள் சேர்ப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரை ஊடகவியலாளர் சேர்ப்பு நடைபெறும். வருடாந்திரச் சந்தா, 10 ரிங்கிட்டாகும் என்று இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய ஊடகவியலாளர் மன்றத்தைத் தலைமையேற்று நடத்தவிருக்கும் 12 வாரிய உறுப்பினர்களில் அறுவருக்கு தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் நியமனக் கடிதங்களை வழங்கிய நிகழ்ச்சிக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய ஊடக மன்றத்தின் முதலாவது வருடாந்திர மாநாடு வரும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய ஊடகவியலாளர் மன்றத்தில் உறுப்பினர்களாகச் சேர விரும்புகின்றவர்கள், www.majlismedia.my அகப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.








