கிள்ளானில் காருக்குள் ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் நிகழ்ந்த வாக்குவாதத்தில் அந்தப் பெண், கத்தியால் பலமுறை குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் பொறாமை காரணமாக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத்தலைவர் டத்தோ எஸ்.சசிகலா தேவி தெரிவித்துள்ளார்.
கிள்ளான், தாமான் சி லியுங், ஜாலான் பாயு திங்கி 5 இல் நேற்று பிற்பகலில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தன்னுடன் இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு, தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு காயமுற்ற 44 வயது நபர், புலன் விசாரணைக்கு ஏதுவாக வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளதாக டத்தோ எஸ்.சசிகலா தேவி குறிப்பிட்டார்.
இந்த கொலை நிகழ்வதற்கு முன்னதாக அருகில் உள்ள உணவகத்திற்கு அந்த ஆணும், பெண்ணும் சென்ற போது அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் காருக்கு வந்தப் பின்னரும் வாக்குவாதம் தொடர்ந்த போது, இந்த கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று ஷா ஆலாமில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ சசிகலா தேவி இதனை தெரிவித்தார்.








