பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.17-
கோலாலம்பூரில் நடைபெற்ற பொது விரிவுரை ஒன்றில், சர்ச்சைக்குரிய கேள்வி எழுப்பியது தொடர்பாக, இன்று அதிகாலையில் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஃஎப்எம்டி செய்தியாளர் ரேக்ஸ் டான், இன்று விடுவிக்கப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் ராஜ்சூரியன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரேக்ஸ் டானை 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய போலீசார் கோரிக்கை வைத்த நிலையில், மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ஃபாரா நபிஹா டான் ஒருநாள் மட்டுமே தடுப்புக் காவல் அனுமதி வழங்கினார்.
இதனையடுத்து, ரேக்ஸ் டானிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணியளவில் அவர் விடுவிக்கப்படலாம் என்றும் ராஜ்சூரியன் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 12-ஆம் தேதி, “காசா சர்வதேச சக்திகளின் உடந்தையை அம்பலப்படுத்துகிறது” என்ற தலைப்பிலான விரிவுரை ஒன்று கோலாலம்பூரில் நடைபெற்றது.
அதில் பிரிட்டிஷ் அரசியல்வாதியான George Galloway கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








