குவாந்தான், ஜனவரி.26-
பண மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக மிரட்டப்பட்ட 38 வயது பெண் ஆசிரியர் ஒருவர், தன்னைத் காவற்படை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட நபரிடம் ஏமாந்து 325 ஆயிரம் ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியர், சந்தேக நபரின் அறிவுறுத்தலின்படி கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக் கட்டத்தில் மொத்தம் 21 தவணைகளாக அந்தப் பெருந்தொகையை ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.
தனது சொந்த சேமிப்பும் வங்கிக் கடன் மூலமாகவும் பெறப்பட்ட இந்தப் பணம் திரும்பக் கிடைக்காததோடு, சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்பு கொள்ள முடியாதபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார். அந்நிய நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்குரிய அழைப்புகளைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்குமாறும் பகாங் மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் அறிவுறுத்தியுள்ளார்.








