மலாக்காவில் தனது 2 மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் 20 வயது நடன ஆசிரியர் 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இன்று முதல் இந்தத் தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பித்துள்ளது.
14 வயது மாணவர் ஒருவர் நேற்று போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும், 15 வயதுடைய மற்றொரு மாணவரும் அந்த ஆசிரியரிடம் பாரம்பரிய நடனம் கற்று வந்த நிலையில், தனக்கும் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
முதல் மாணவர் கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் குருபோங்கில் உள்ள சந்தேக நபரின் வீடு மற்றும் தாசெக் 1 குருபோங் பகுதியில் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இரண்டாவது மாணவர், கிளேபாங்கில் உள்ள என்கோர் அரங்கில் நடைபெற்ற சுற்றுலா தின நிகழ்ச்சிக்கான ஸாப்பின் நடனத்தில் பங்கேற்ற போது ஆசிரியருடன் அறிமுகமானதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் ஹோட்டல் ஒன்றில் முதல் சம்பவமும், கடந்த ஜூன் தொடக்கத்தில் குருபோங்கில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் சமீபத்திய சம்பவமும் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.








