ரேலா உறுப்பினர்களின் பணி நேரத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய கொடுப்பனவு விகிதத்தை நிர்ணயிப்பது தொடர்பாக உள்துறை அமைச்சும், நிதியமைச்சும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இது குறித்து உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறுகையில், தற்போது வழங்கப்படும் மணிக்கு 8 ரிங்கிட் கொடுப்பனவு, குறிப்பாக 12 மணி நேரம் வரை பணியாற்றும் ரேலா உறுப்பினர்களின் உழைப்புக்கு ஏற்றதாக இல்லை என்றார்.
24 நாட்களுக்கு தினமும் 8 மணி நேரம் பணியாற்றினாலும், அவர்களுக்கு 1,536 ரிங்கிட் மட்டுமே கிடைப்பதால், இது 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நிதியமைச்சுடன் நடைபெற்ற பட்ஜெட் பேச்சுவார்த்தையில் தாம் வலியுறுத்தியதாகவும் சைஃபுடின் தெரிவித்துள்ளார்.
புதிய கொடுப்பனவு விகிதம் குறித்து கேடிஎன்னின் தலைமைச் செயலாளர் மற்றும் துணை தலைமைச் செயலாளர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், முடிந்தவரை அடுத்த நிதியாண்டிலேயே புதிய விகிதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய கொடுப்பனவு தொகை எவ்வளவு என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சைஃபுடின், அது நியாயமான வரம்பிற்குள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.








