அலோர் ஸ்டார், ஏப்ரல்.05-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 173 ஆயிரத்து 500 ரிங்கிட் மதிப்பிலான போலி தங்க நகை முன்பதிவு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 39 வயது இல்லத்தரசி சித்தி ஹஜார்துல் ஹானி அப்துல் ஹாமிட் இன்று அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தம்மீது சுமத்தப்பட்ட எட்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார். பாதிக்கப்பட்ட 55 வயது பெண்ணை ஏமாற்றி, 2024 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக் கட்டத்தில் பல தவணைகளாகத் தனது வங்கித் கணக்கிற்குப் பணத்தை அனுப்பச் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷார்மிலா அப்துல் சமாட், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 80 ஆயிரம் ரிங்கிட் பிணைத் தொகை விதித்ததுடன், கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், சாட்சிகளைத் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மே 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.








