கோலாலம்பூர், நவ. 11-
வழக்கறிஞர் ஒருவரை அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார் – ஐ செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
36 வயது இன்ஸ்பெக்டர் ஷீலாவை, குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. இன்ஸ்பெக்டர் ஷீலாவிற்கு எதிரான வழக்கை தொடரவிரும்பவில்லை என்று ஸ்ரீ கோம்பாக்கைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. தனேஸ்வரன் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த பெண் உயர் போலீஸ் அதிகாரியை நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருருந்து விடுதலை செய்தது.
ஷீலாவிற்கு எதிரான குற்றவியல் வழக்கு விசாரணை இன்று செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கியது. இவ்வழக்கில் பிரதான சாட்சியான வழக்கறிஞர் தனேஸ்வரன் வழக்கை தொடரப்போவதில்லை என்று அறிவித்துள்ளதாக ஷீலாவின் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்தார்.
ஷீலாவிற்கு எதிராக தாம் எந்தவொரு போலீஸ் புகாரும் செய்யாத நிலையில் இவ்வழக்கில் தாம் ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டு இருப்பது குறித்து வழக்கறிஞர் தனேஸ்வரன் அதிர்ச்சி தெரிவித்து இருப்பதாக மனோகரன் குறிப்பிட்டார்.
தனேஸ்வரனின் இம்முடிவைத்தொடர்ந்து ஷீலாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாங்கள் தற்காலிகமாக மீட்டுக்கொள்வதாக பிராசிகியூஷன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்ததாக மனோகரன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜுன் 15 ஆம் தேதி மாலை 5.26 மணியளவில் கோம்பாக், தாமான் ஸ்ரீ கோம்பாக், ஜாலான் எஸ்.ஜி. 1/1 இல் ஓர் உணவக கடை வரிசையில் செல்வக்குமாரி என்ற பெண்ணை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், அதனை தட்டிக்கேட்க சென்ற வழக்கறிஞர் தனேஸ்வனை சிறுமைப்படுத்தும் வகையில் ஷீலா நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.








