ஹஜ்ஜுப் பெருநாள், பொது விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறையையொட்டி, நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் உச்சக்கட்ட நாட்களில் தினசரி சராசரி போக்குவரத்து 33 லட்சம் வாகனங்களை எட்டும் என மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் கணித்துள்ளது. இந்த வாகன அதிகரிப்பு இன்று மே 22 ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை படிப்படியாக ஏற்படும் என அதன் தலைமை இயக்குனர் முகமது ஹட்ஸ்மிர் யூசோஃப் தெரிவித்துள்ளார்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையான பிளஸ் விரைவு சாலையில் அதிகபட்சமாக 22 லட்சம் வாகனங்கள் செல்லும் வேளையில் டியூக் சாலையில் 2 லட்சத்து 83 ஆயிரம் வாகனங்களும், கேஎல்-காராக் நெடுஞ்சாலையில் 2 லட்சத்து 9 ஆயிரம் வாகனங்களும் மேற்குக் கடற்கரை விரைவுச்சாலையான டபிள்யூசிஇயில் 1 லட்சத்து 51 ஆயிரம் வாகனங்களும். லெகாஸ் நெடுஞ்சாலையில் 1 லட்சத்து 37 ஆயிரம் வாகனங்களும், லாத்தார் நெடுஞ்சாலையில் 1 லட்சத்து 25 ஆயிரம் வாகனங்களும் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








