சிலாங்கூர் மாநில அரசுக்குச் சொந்தமான மூன்று உயர்கல்வி கழகங்களில் படிக்கும் 4,000 உள்ளூர் மாணவர்களின் கல்விச் செலவில் பாதியை ஏற்பதற்காக சிலாங்கூர் அரசு 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது. மலேசிய தீவகற்பத்தில் இத்தகைய சலுகையை வழங்கும் ஒரே மாநிலம் சிலாங்கூர் மட்டுமே என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் இஸ்லாமிய பல்கலைக்கழகம், சிலாங்கூர் பல்கலைக்கழகம் மற்றும் சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் ஆகிய மூன்று கல்விக்கழகங்களில் இத்திட்டம் பொருந்தும். தரம் வாய்ந்த கல்வி மற்றும் பயிற்சிக்கான செலவு அதிகம் என்றாலும், எதிர்கால சந்ததியினருக்கான முதலீடாகவே இதனை மாநில அரசு பார்க்கிறது.
இத்திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், தகுதியுடைய மாணவர்களுக்கு முழுமையான இலவசக் கல்வியை வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலிக்கும் என்றும் அமிருடின் கூறினார்.








