சுங்கை பெசார் அம்னோ தலைவரான ஜமால் யுனோஸ், முன்னாள் அமைச்சரும், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருமான கைரி ஜமாலுடினிடம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று பகிரங்க மன்னிப்பு கோரினார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு கைரி தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடர்பான சமரசப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இன்று நீதிபதி ஆனந்த் பொன்னுதுரை முன்னிலையில் ஜமால் தமது மன்னிப்பு அறிக்கையை வாசித்தார்.
அதன் படி, கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜனவரி 14-ஆம் தேதி, உலக வர்த்தக மையத்தில் நடந்த அம்னோ பொதுக்கூட்டத்தினிடையே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கைரியை ஊழல் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தியும், கட்சி பிரதிநிதிகளை குழப்பம் ஏற்படுத்த பணம் வழங்கியதாகவும் ஜமால் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், தாம் கூறிய குற்றச்சாட்டுகளைத் திரும்ப பெற்றதோடு, அப்பதிவுகளை சமூக ஊடகங்களிலிருந்து நீக்கவும் ஜமால் ஒப்புக் கொண்டார்.
அதேவேளையில், தனது செயலால் கைரியின் நற்பெயரும் நம்பகத்தன்மையும் பாதிக்கப்பட்டதற்காக வருத்தம் தெரிவித்த ஜமால், கைரிக்கு ஏற்பட்ட சிரமம் மற்றும் மனவேதனைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரினார்.








