கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பகுதியில், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த விளம்பர படப்பிடிப்பின் போது, pickup வாகனத்தின் மீது தீயைப் பற்ற வைத்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய ஒன்பது பேர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்படவுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் ஆறு பேர் விடுவிக்கப்படுவதுடன், அவர்கள் அரசுத் தரப்பு சாட்சிகளாக மாற்றப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள், 17 முதல் 30 வயதுக்குட்பட்ட 14 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட மொத்தம் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 24 வயதுடைய ஆடை விற்பனைக் கடை உரிமையாளர், அவரது பணியாளர்கள் மற்றும் விளம்பர நிகழ்வில் பங்கேற்க பணம் கொடுத்து அழைக்கப்பட்ட சிலர் அக்குழுவில் இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளது.
அதேவேளையில், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எட்டு பேருக்கு 50 முதல் 700 ரிங்கிட் வரை பணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.








