சிங்கப்பூரில் உள்ள சுமார் 544 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளை பயன்படுத்தத் தடை விதிக்க கோரி, முன்னாள் நிதியமைச்சரான காலஞ்சென்ற துன் டாயிம் ஜைனுடினின் மனைவி நைமா காலித் மற்றும் மேலும் எட்டு பேருக்கு எதிராக, அரசுத் தரப்பு தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
பணமோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் சட்டவிரோத வருமானச் செயல்கள் தடுப்புச் சட்டம் 2001 (AMLA) பிரிவு 53 இன் கீழ் தேவையான நிபந்தனைகளை அரசுத் தரப்பு நிரூபிக்க தவறியதாக நீதிபதி ஆரிஃப் எம்ரான் அரிஃபின் தெரிவித்தார்.
மேலும், சட்டப் பிரிவு 53 இன் கீழ் தேவையான சோதனைகள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2025 -ம் ஆண்டு, ஜூன் 19-ஆம் தேதி, நைமா, அவரது மகன் அமீர் ஜைனுடின், மேலும் இரண்டு தனிநபர்கள், ஐந்து நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய தரப்புகள் வெளிநாட்டு சொத்துகளை நிர்வகிப்பதைத் தடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், ஒருதரப்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
குறிப்பாக சிங்கப்பூரிலுள்ள பல வங்கி கணக்குகளில் 21 மில்லியன் Pounds மலேசிய மதிப்பில் சுமார் 121 மில்லியன் ரிங்கிட் மற்றும் 99 மில்லியன் அமெரிக்க டாலர்கள், மலேசிய மதிப்பில் சுமார் 423 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதிகள் இருப்பதாக எஸ்பிஆர்எம் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.








