நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வுகாண மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதே சிறந்த வழி என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் பரிந்துரை செய்துள்ளார்.
மந்திரி புசார் அமினுடின் ஹாரூனுக்கு வழங்கி வந்த ஆதரவை பாரிசான் நேஷனல் கூட்டணியின் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் வாபஸ் பெற்றதை அடுத்து, அவர் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டார் என்று முகமட் ஹசான் குறிப்பிட்டார்.
எனவே, அமினுடின் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் அல்லது சட்டமன்றத்தைக் கலைத்து மக்கள் வசம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சருமான முகமட் ஹசான் தெரிவித்தார்.
முன்னதாக, யாங் டி-பெர்துவான் பெசாரை நீக்க முயன்ற தலைவர்கள் தொடர்பான சர்ச்சையை அமினுடின் கையாண்ட விதம் காரணமாக பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள், அவருக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக்கொண்டனர்.
எனினும், தற்போதைய ஒற்றுமை அரசாங்க நிர்வாகத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அம்னோ தலைமைத்துவம், அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சட்டமன்றக் கூட்டம் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அமினுடின் பதவி தற்காலிகமாகத் தப்பியுள்ளது.








