அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கான ஆதரவு 50 விழுக்காடாக சரிந்துள்ளதாக மெர்டேக்கா ஆய்வு மையம் மேற்கொண்டுள்ள ஓர் ஆய்வை அரசாங்கம், நேர்மறையான கோணத்தில் பார்க்கிறது என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அன்வார் தலைமையிலான நிர்வாகம் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி மெர்டேக்கா ஆய்வு மையம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. மெர்டேக்கா ஆய்வு மையத்தின் கருத்துகளையும், அதன் பரிந்துரைகளையும் ஒற்றுமை அரசாங்கம், ஓர் ஆக்கப்பூர்வமான பார்வையில் அணுகுகிறது என்று ஃபாமி ஃபட்சில் விளக்கினார்.
மக்களிடையே மேலோங்கியுள்ள பொருளாதார கவகைள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்னைகளை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரான ஃபாமி ஃபட்சில் தெரிவித்தார்.








