Mar 30, 2026
Thisaigal NewsYouTube
ஐஸ் பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட மூதாட்டின் உடலில் தடயவியல் சோதனை இன்னும் முற்றுப்பெறவில்லை
தற்போதைய செய்திகள்

ஐஸ் பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட மூதாட்டின் உடலில் தடயவியல் சோதனை இன்னும் முற்றுப்பெறவில்லை

Share:

கோலாலம்பூர், நவ. 18-


தனது மகனால் கொலை செய்யப்பட்டு, கடந்த மூன்று ஆண்டு காலமாக வீட்டின் ஐஸ் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மூதாட்டியின் சடலத்தின் மீது மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை மேற்கொண்டு வரும் சோதனை இன்னும் முற்றுப்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதாட்டியின் உடலின் எலும்பு மூட்டுகளிலும், இதர பாகங்களிலும் ஐஸ் கட்டியின் படிவ துகள்கள் இன்னமும் இருப்பதால் சவப்பரிசோதனை மேற்கொள்வதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மாஸாரிமான் கூ மாமூட் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டு காலமாக சடலம் ஐஸ் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் கொலைக்கான துல்லியமான ஆதாரங்களை தடயவியல் நுட்ப முறையைப் பயன்படுத்தி ஆராய வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

80 வயதுடைய அந்த மூதாட்டி சொந்த மகனால் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டு, வீட்டின் ஐஸ் பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த விவகாரம் கடந்த வாரம் அம்பலமானது.

கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை ஓ.யு.ஜி. கார்டனில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் தொடர்பில் மூதாட்டியின் 53 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் 7 நாள் தடுப்புக்காவல் நாளை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடையவிருக்கிறது.

அந்த சந்தேக நபர், மருத்துவமனையில் மன நல சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதையும் ஏசிபி கூ மாஸாரிமான் சுட்டிக்காட்டினார்.

Related News