சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இன்று காலை சிறப்புப் பூசையும் வழிபாடுகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமை தாங்கினார். கோத்தா கெமுனிங், புக்கிட் கெமுனிங், புக்கிட் ரிமாவ் மற்றும் தாமான் ஸ்ரீ முடா ஆகிய பகுதிகளுக்கான இந்திய சமூகத் தலைவர் பத்துமலை அம்மாசி முன்னிலையில் இந்த ஆன்மீக சங்கமம் நடைபெற்றது.
இந்தச் சிறப்புப் பூஜையில் அப்பகுதியைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு இறைவழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் மக்களுடன் கலந்துரையாடிய சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், "பிறந்துள்ள இந்தச் சித்திரைப் புத்தாண்டு அனைவருக்கும் நலம் தரும் சிறப்பான ஆண்டாக அமையட்டும்" எனத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
சமூகத் தலைவர் பத்துமலை அம்மாசியும் பொதுமக்களுக்குத் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பக்தி மணம் கமழ நடைபெற்ற இந்நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே புத்தாண்டின் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் பறைசாற்றுவதாக அமைந்தது.











