சிரம்பான், பிப்ரவரி.28-
கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நீலாய், டேசா பல்மாவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீடமைப்பு வளாகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த 63 வயது முதியவர் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கோலாலம்பூர் மருத்துவமனையில் நேற்று இரவு 8.18 மணியளவில் அவர் மரணமடைந்ததை, நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா உறுதிப்படுத்தியுள்ளார்.
சிகிச்சைகளுக்குப் பலனளிக்காத அதிர்ச்சி நிலையில் அவரது உடல்நிலை இருந்ததால், அவரது மரணம் சம்பவித்துள்ளதாகவும் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 9-ஆம் தேதி, Yeoh Hock Sun என்ற அந்த நபருக்கு எதிராக, வெடிப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தது உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
இருப்பினும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.








