குவாந்தான், செப்டம்பர்.02-
செயற்கை ஆயுதங்களைப் பயன்படுத்தி, போர் விளையாட்டில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்டு இருந்த 41 பேரின் முயற்சியைப் போலீசார் தவிடு பொடியாக்கினர்.
வார் கேம் எனப்படும் அந்த போர் விளையாட்டுக்கு அவர்கள் பயன்படுத்தவிருந்த செயற்கைத் துப்பாக்கிகள் உட்பட அனைத்து ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஷாரி அபு சமான் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குவாந்தான், கெபேங், பாடாங் ஹாங்குஸில் உள்ள அரச மலேசிய கடற்படைக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட நிலப் பகுதியில் அந்த 41 பேரும் போர் விளையாட்டில் ஈடுபடவிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சேவை ஊழியர்கள், இராணுவ வீரர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் என 21 க்கும் 65 க்கும் இடைப்பட்ட வயதுடைய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏசிபி அஷாரி மேலும் கூறினார்.
மொத்தம் 400 க்கும் மேற்பட்ட செயற்கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செல்லத்தக்க லைசென்ஸின்றி அவர்கள் செயற்கைச் சுடும் ஆயுதங்களை வைத்திருந்ததாக அவர் விளக்கினார்.








