இஸ்கண்டார் புத்ரி, ஜனவரி.19-
ஜோகூர், முத்தியாரா ரினி (Mutiara Rini) போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டு, பணியிலிருந்த போலீஸ்காரரைத் தாக்கிய 22 வயது இளைஞர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 3.40 மணியளவில், அந்த இளைஞர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து அநாகரீகமான முறையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். திடீரென தன்னிடம் இருந்த மோட்டார் சைக்கிள் ரிம்-ஐ (Rim) வீசியதுடன், அங்கிருந்த போலீஸ்காரரின் முகத்தில் பலமாகக் குத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட போலீஸ்காரரின் வலது கண் பகுதியில் வீக்கம் ஏற்பட்டதுடன், தோள் பட்டை மற்றும் இடது காலிலும் காயங்கள் ஏற்பட்டன. சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்த இளைஞர் போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார் என்று மாவட்ட போலீஸ் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.
அந்த இளைஞரிடமிருந்த தோள்பையில் ஒரு கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ரிம் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அந்த இளைஞருக்கு முன் குற்றப் பின்னணி ஏதும் இல்லை என்பது தெரிய வந்தது. தற்போது அவர் மனநலப் பரிசோதனைக்காக சுல்தானா அமீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்று குமரேசன் மேலும் கூறினார்.








