சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரியை கைது செய்வதற்காக, அனைத்துலக குற்றப்புலனாய்வு அமைப்பான இண்டர்போல்-இடம் ரெட் நோட்டீஸ் பிறப்பிக்க மலேசிய போலீஸ் விண்ணப்பித்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், தமீம் தஹ்ரியின் இருப்பிடத்தைக் கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக சைபுடின் இஸ்மாயில் குறிப்பிடுள்ளார்.
மேலும், குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், சந்தேகநபர் இன்னும் வெளிநாட்டிலேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த மே 17-ஆம் தேதி, லங்காவி மஜிஸ்திரேட் நீதிமன்றத்திலிருந்து கைது வாரண்ட் பெறப்பட்டதுடன், அவரது பெயர் கருப்புப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், அவரை மலேசியாவுக்கு திருப்பி அழைத்து வந்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நோக்கில், அவரது கடப்பிதழை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்ததுடன், கடந்த ஜூன் 8-ஆம் தேதி, இண்டர்போல் ரெட் நோட்டீஸ்க்காக அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக சைபுடின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.








