கடந்த மூன்று ஆண்டுகளில் 3,511 மருத்துவ அதிகாரிகள் அரசாங்க சுகாதார சேவையை விட்டு விலகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் அவர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், கடந்த 2023-ஆம் ஆண்டில் 1,283 பேரும், 2024-ஆம் ஆண்டில் 1,153 பேரும், 2025-ஆம் ஆண்டில் 1,075 பேரும் அரசு சுகாதாரத் துறையிலிருந்து விலகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள மருத்துவ அதிகாரிகளை அரசாங்க சேவையில் தொடர்ந்து பணியாற்ற வைப்பதற்காக, சலுகைகளை மேம்படுத்துதல், தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் நிபுணத்துவப் பயிற்சி பெறும் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதையோ, வெளிநாடுகளுக்கு ஆட்சேர்க்கும் பதிவு பெற்ற வேலைவாய்ப்பு முகமைகளின் முயற்சிகளைத் தடுக்கவோ, சுகாதார அமைச்சிடம் எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை என்றும் சுல்கிப்ளி அகமட் விளக்கமளித்துள்ளார்.








