அம்பாங், டிசம்பர்.02-
கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அம்பாங்கில் உள்ள Ampang Lookout Point Bukit Ampang-கில் தனிநபர்களை உள்ளடக்கிய கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு ஆளாகிய ஒரு பாகிஸ்தான் பிரஜை மற்றும் அவரின் நண்பர்கள் காயத்திற்கு ஆளாகினர்.
சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு 11 மணியளவில் அந்த பாகிஸ்தான் ஆடவரும், அவரின் நண்பர்களும் ஏறிச் சென்ற கார், சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்ற போது இந்தத் தாக்குதல் நடந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கைருல் அனுவார் காலிட் தெரிவித்தார்.
நின்று கொண்டிருந்த காரின் பக்கம் ஓடி வந்த ஆடவர் ஒருவர், மிக ஆவேசமாக கத்தியதாகவும், காரை வழிமறித்துக் கொண்டு, தாம் தற்காப்பு அமைச்சின் உறுப்பினர் என்றும் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
சிறிது நேரத்தில் அவ்விடத்தில் குவிந்து விட்ட சுமார் 25 ஆண்கள், அந்த அந்நிய நாட்டு ஆடவரின் வாகனத்தை அடித்துச் சேதப்படுத்தியுடன் காரில் இருந்த மூவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் 18 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு நபர்களை அம்பாங் ஜெயா போலீசார் கைது செய்துள்ளதாக ஏசிபி கைருல் தெரிவித்தார்.








