கோலாலம்பூரில் உள்ள முக்கிய மற்றும் பிரதான சாலைகள் மொத்தம் 59 கிலோமீட்டர் தூரம் வரை, 1.3 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக சீரமைக்கப்படவுள்ளன.
எட்டு சாலைகளை உள்ளடக்கிய இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. முதல் கட்டப் பணிகள் இந்த மாதம் தொடங்கி, 24 வாரங்களில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு சம்பந்தப்பட்ட சாலைகளில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேசங்களுக்கான அமைச்சர் ஹன்னா இயோ, இந்தத் தகவலை தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்காக கோலாலம்பூர் மாநகர் மன்றம், 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், புதிய சாலை அமைக்கும் முறையால் சாலைகளின் ஆயுட்காலம் 50 விழுக்காடு வரை அதிகரிப்பதுடன், பராமரிப்புச் செலவும் 40 விழுக்காடு வரை குறையும் என்றும் ஹன்னாத இயோ தெரிவித்தார்.
மேலும் கூட்டரசுப் பிரதேசங்களுக்கான மாரிஸ் மானியத்தை அதிகரிக்க நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹன்னா இயோ தெரிவித்தார். கோலாலம்பூரில் தினமும் சுமார் 30 லட்சம் வாகனங்கள் பயணிப்பதாலும், உச்ச நேரங்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சாலைகளை பயன்படுத்துவதாலும், அதிகப்படியான பயன்பாட்டால் சாலைகள் விரைவில் சேதமடைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“எனவே, இந்த முறை மேற்கொள்ளப்படும் செலவு அதிகமாக இருந்தாலும், சாதாரணமாக செப்பனிடப்படும் ஒட்டுப்பணியை விட சாலைகளின் ஆயுட்காலத்தை 50 விழுக்காடு வரை அதிகரிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் ஹன்னா இயோவுடன், கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ ஃபாட்லுன் மாக் உஜூட் உடனிருந்தார்.








