தேசியப் பதிவுத் துறை அலுவலகமான ஜேபிஎன்-க்கு வெளிநாட்டவர்கள் வருவதால் மட்டும், அவர்கள் மைக்காட் பெற விண்ணப்பிக்கிறார்கள் அல்லது அவர்களுக்கு மைக்காட் வழங்கப்படவுள்ளது என்று கருதக்கூடாது என தேசியப் பதிவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
வெளிநாட்டவர்களும் பிறப்புப் பதிவு, வெளிநாட்டவரை திருமணம் செய்தவர்களின் சிவில் திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணப் பணிகளுக்காக ஜேபிஎன் அலுவலகத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேபிஎன் அலுவலகத்தில் ஒருவர் இருப்பதை வைத்து அல்லது ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்து, அவர்கள் மைக்காட் பெற வந்துள்ளனர் என முடிவு செய்ய வேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, இளஞ்சிவப்பு நிற பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவது, அந்த நபர் மலேசியக் குடிமகன் என்பதற்கான சான்று அல்ல என்றும் ஜேபிஎன் தெளிவுபடுத்தியுள்ளது.
மலேசியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும், பெற்றோரின் குடியுரிமை நிலையைப் பொருட்படுத்தாமல் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தேசியப் பதிவுத் துறை தெரிவித்துள்ளது.








