கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் குடிநுழைவுத் துறையின் ‘பிளாக் மரியா’ லாரி மோதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்த லாரி ஓட்டுநர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 43 வயதான அக்பர் சைனோல் என்ற குடிநுழைவுத்துறை லாரி ஓட்டுநர், தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
நேற்று ஆகஸ்ட் 19ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் குடிநுழைவுத்துறை லாரி ஓட்டுநர், கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் லாரியை ஓட்டி, 52 வயது ஷேக் ஃபிர்டவ்ஸ் ஷேக் யஹ்யா, மற்றும் அவரது 24, 12 வயதுடைய இரு மகள்களின் மரணத்துக்கு காரணமானதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்தார். சிவப்பு விளக்கை மீறி சென்று, ஒரு காரை மோதிய லாரி, பின்னர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சமிக்ஞை விளக்குப்பகுதியில் நின்று கொண்டு இருந்த அந்த மூவரையும் மோதித் தள்ளியதாக அவர் மீது இதர குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐந்து குற்றச்சாட்டுகளுக்கும் மொத்தம் 60,000 ரிங்கிட் ஜாமீன் விதித்த நீதிமன்றம், மாதந்தோறும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிட்டது.
வழக்கு முடியும் வரை அவரது ஓட்டுநர் உரிமமும் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.








