கோத்தா கினபாலு, மார்ச்.15-
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 103 டாலராக உயர்ந்த போதிலும், மலேசியாவில் ரோன்95 பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென் என்ற நிலையிலேயே நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தேசிய பயனீட்டாளர் தின விழாவில் உரையாற்றிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், புருணைக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் வழங்கும் நாடுகளில் ஒன்றாக மலேசியா திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
இந்த விலையைத் தக்க வைக்க அரசாங்கம் மாதத்திற்கு சுமார் 2 பில்லியன் ரிங்கிட் மானியத்தைச் சுமப்பதாகவும், இது ஆண்டுக்கு 24 பில்லியன் ரிங்கிட்டாக உயரும் என்றும் அவர் தெரிவித்தார். மக்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும் இந்த மானியக் கொள்கை தொடர்வதாக அவர் விளக்கினார்.








