மலேசியாவில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பம் தொடர்பான வேலை வாய்ப்பு சூழலை உருவாக்கும் வகையில் மக்கள் மத்தியில் அத்துறை சார்ந்த நிபுணத்துவ ஆற்றல்களை வளர்க்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
திறமைகளை வளர்ப்பது மூலமே மலேசியாவின் கெளரவத்தை அனைத்து நிலைகளிலும் விரிவடைந்து வரும் இலக்கவியல் உருமாற்றுப் பார்வையிலிருந்து உயர்த்த முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இலக்கவியல் பொருளாதார மையமான பெடி, மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, தொடர்புத்துறை மற்றும் இலக்கவியல் அமைச்சு ஆகியவற்றுக்கு அடுத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மக்களுக்கு உதவக்கூடிய நவீன தொழில்நுட்ப மேம்பாட்டில் முதன்மை கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இன்று புத்ராஜெயா, அனைத்துலக மாநாட்டு மையத்தில் பெடி மடானி மாநாட்டு மன்றக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்த வைத்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் தொடர்புத்துறை மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், துணை அமைச்சர் தியோ நீ சிங் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.








