சிரம்பான், ஆகஸ்ட்.02-
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், அரச குடும்பத்திற்கு எப்போதும் மரியாதையுடனும் விசுவாசத்துடனும் செயல்பட வேண்டும் என்று நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் Yang di-Pertuan Besar Tuanku Muhriz Tuanku Munawir அறிவுறுத்தியுள்ளார்.
Istana Besar Seri Menanti அரண்மனையில் இன்று நடைபெற்ற புதிய மந்திரி பெசாரின் பதவியேற்பு விழாவில் உரையாற்றிய அவர், மாநில அரசியலமைப்பின் இறையாண்மையைப் பாதுகாப்பதுடன், நெகிரி செம்பிலான் மாநில பாரம்பரிய ஆட்சியாளர் மன்றமான DKU-வுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், மதம், இனம், கலாசாரம் ஆகிய வேறுபாடுகளை மதித்து, பரஸ்பர புரிதல், சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமை உணர்வை அனைவரும் தொடர்ந்து பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து பணியாற்றுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய Tuanku Muhriz, 16-வது மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
தோல்வியடைந்த வேட்பாளர்களும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், மக்கள் வழங்கியுள்ள ஆணை மிகப் பெரிய பொறுப்பு என்பதை நினைவூட்டிய அவர், அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களை விட மாநில மக்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நம்பிக்கை மீறல் எந்தச் சூழலிலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் எச்சரித்தார்.








