- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உறுதி
இந்தியர்கள் மத்தியில் ஏழ்மையின் அழுத்தத்தை குறைக்கும் முயற்சியாக திவிஇதி எனப்படும் வொகேஷ்னல் தொழில்திறன் பயிற்சி கல்வித்திட்டத்தில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.
தேசிய திவிஇதி மன்றத்தின் நடவடிக்கைக்குழுத் தலைவர் என்ற முறையில் இவ்விவகாரத்தை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியிடம் தெரிவித்து இருப்பதாகவும், அந்த தொழில் பயிற்சி கல்வித் திட்டத்தில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை செபராங் பிறை, அரேனா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பினாங்கு இந்தியர்களுடன் பிரதமர் எனும் மாபெரும் நிகழ்வில் உரையாற்றுகையில் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.
பினாங்கு முதலமைச்சர் சொவ் கொன் யோ, துணை முதலமைச்சர் டாக்டர் P. இராமசாமி உட்பட சுமார் மூவாயிரம் பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் திவிஇதி , தொழில் பயிற்சித் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்த வண்ணம் இருப்பதாக டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் தம்மிடம் தெரிவித்து இருப்பதாகவும், அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளுமாறு அவருக்கு பணித்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்திய மற்றும் சீன மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பான தேர்ச்சி அடைவு நிலையை கொண்டிருந்த போதிலும் அவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படும் பரவலான புகார்கள் குறித்து ஆராயும்படி கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கை கேட்டுக்கொண்டுள்ளதாக அன்வார் குறிப்பிட்டார்.








