புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் மேற்கொள்ளப்பட்ட 24 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மேம்பாட்டு திட்டம் தொடர்பாக, ஒப்பந்ததாரர் ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மிடம் ஊழல் புகார் அளித்துள்ளார்.
2027-ஆம் ஆண்டிற்கான தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இரண்டு டெண்டர்கள் தொடர்பாக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அப்புகாரில் புதிய ஓட்டப்பந்தய தடம் அமைக்கும் திட்டமும், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய நிகழ்வுகளின் போது பயன்படுத்தப்படும் பாதுகாப்பு தரை அமைப்பு தொடர்பான பணிகளும் அடங்குவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், கடந்த செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில், மலேசிய விளையாட்டு அரங்கங்களின் கழகமான பிஎஸ்எம்க்கு எதிராக இந்த புகாரை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக பிஎஸ்எம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட டெண்டர்கள் அனைத்தும் அரசாங்க கொள்முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2017-ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த தற்போதைய ஓட்டப்பந்தய தடமானது, அது பயன்படுத்துவதற்கான காலத்தை நிறைவு செய்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் பழுதால் ஏற்பட்ட சேதங்களின் காரணமாக, அந்த தடத்தை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பிஎஸ்எம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், திறந்த டெண்டர் முறையின் கீழ் வழங்கப்பட்ட இந்த ஒப்பந்தங்களில், தொழில்நுட்பம் மற்றும் நிதி அம்சங்கள், ஆகிய இரண்டும் மதிப்பீட்டில் கொள்ளப்பட்டதாகவும் பிஎஸ்எம் விளக்கமளித்துள்ளது.








