அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 1எம்டிபி ஊழல் விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதியை பயன்படுத்தி வாங்கப்பட்ட ஓர் ஆடம்பர குடியிருப்பை பறிமுதல் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அந்த சொத்திலிருந்து கிடைத்த வாடகை வருமானமும் பறிமுதல் நடவடிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறையான டிஓஜே நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1எம்டிபி தொடர்பான உலகளாவிய நிதிமோசடியின் மூலம் கையாடல் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 60 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது மலேசிய மதிப்பில் சுமார் 24 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளை மீட்கும் நோக்கில் தொடரப்பட்ட சிவில் வழக்கிற்கு இதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளதாகவும் டிஓஜே தெரிவித்துள்ளது.
அனைத்துலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 1எம்டிபி ஊழல் விவகாரத்தில், பல நாடுகளில் உள்ள சொத்துகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், அந்த குடியிருப்பானது, தலைமறைவாகியுள்ள மலேசிய தொழிலதிபரான ஜோ லோ என்பவரின் தனிப்பட்ட உதவியாளராக கருதப்படும் மே லிங் கேத்தரின் டான் என்பவரின் நலனுக்காக வாங்கப்பட்டதாக டிஓஜே குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், அந்த சொத்திலிருந்து கிடைத்த வாடகை வருமானத்தையும் டான் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி லாபம் அடைந்ததாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.








