மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசம் பாக்கி, தனது இளைய சகோதரர் டத்தோ நாசிர் பாக்கியுடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு 178.29 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டதற்கும் தமக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தி எட்ஜ் மலேசியா வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்டேகிரிட்டி பாடு எஸ்டிஎன் பிஎச்ட் நிறுவனம், மலேசியா–சிங்கப்பூர் எல்லையில், சாலைக் கட்டணம் மற்றும் வாகன நுழைவு அனுமதி அமைப்பை உருவாக்கி இயக்குவதற்கான ஆறு ஆண்டுக் கால ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள அசம் பாக்கி, அந்த ஒப்பந்தத்தை வழங்கியது போக்குவரத்து அமைச்சின் முடிவு என்றும், தனது சகோதரரின் தொழில் நடவடிக்கைகளுடன் தமக்கு எந்த விதத் தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடன் தொடர்புடையவர்கள் என்பதற்காக தனது குடும்பத்தினரையும் குறி வைப்பது சரியல்ல என்றும் அசம் பாக்கி தெரிவித்துள்ளார்.








