Jul 6, 2026
Thisaigal NewsYouTube
எம்டியுசியின் தொழிற்சங்க வரலாற்றில் டாக்டர் பிபி.  நாராயணன் பெயர் இடம் பெறாதது ஏன்? வரலாறுகள் மறைக்கப்படுகின்றனவா?
தற்போதைய செய்திகள்

எம்டியுசியின் தொழிற்சங்க வரலாற்றில் டாக்டர் பிபி. நாராயணன் பெயர் இடம் பெறாதது ஏன்? வரலாறுகள் மறைக்கப்படுகின்றனவா?

Share:

மலாக்கா, ஜூன்.16-

மனித வள அமைச்சும், மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இணைந்து வெளியிட்டுள்ள மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸான எம்டியுசி வரலாற்று நூலில், மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முதலாவது பொதுச் செயலாளர் டாக்டர் பிபி. நாராயணனைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமல் வரலாறு மறைக்கப்பட்டு இருப்பதாக தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் தெரிவித்துள்ளார்.

இது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது மற்றும் அறவே ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என்ற டத்தோ சங்கரன் குறிப்பிட்டார்.

1950 ஆம் ஆண்டு தனது 27ஆவது வயதில் டாக்டர் பிபி. நாராயணன், எம்சியுசி என்ற தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்தார். அவர்தான் எம்டியுசியின் முதலாவது தலைவர் ஆவார்.

நாட்டில் தொழிற்சங்க வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த டாக்டர் பிபி. நாராயணனைப் பற்றி ஒரு வரி கூட அந்த வரலாற்று நூலில் இடம் பெறாமல் போனது உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது.

கடந்த 2023 ஆண்டு வெளியிடப்பட்ட கெதொகொஹான் பிரேசிடன் எம்டியுசி என்ற மலாய் நூலில் தொழிற்சங்கத்திற்குப் பாடுபட்டவர்கள் என்று யார் யாரோ பெயர்கள் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், எம்டியுசியை அமைத்தவர் டாக்டர் பிபி. நாராயணன்தான் என்ற உண்மை மறைக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஜி. சங்கரன் குறிப்பிட்டார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மலாக்காவில் நடைபெற்ற 21 ஆவது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மலாக்கா மாநில கிளையின் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்துப் பேசுகையில் டத்தோ ஜி. சங்கரன் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.

மனித வள அமைச்சு இணைந்து தயாரித்த இந்த நூலில் வரலாற்றுப் பிழை எவ்வாறு நிகழ்ந்தது என்பது பல்வேறு ஐயங்கள் எழுவதாக டத்தோ ஜி. சங்கரன் குறிப்பிட்டார்.

Related News