டிச.10-
செராஸ், தாமான் செராஸ் பெர்டானாவில் இன்று காலையில் சிவப்பு நிற ரிப்பன் கட்டப்பட்ட ஒரு சூட்கேஸ் வடிவிலான பயணப்பெட்டியில் கண்டு பிடிக்கப்பட்ட சடலம், இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Naazron Abdul Yusof தெரிவித்தார்.
அந்த சடலம் மீட்கப்பட்டு, செர்டாங் மருத்துவமனையின் சவகிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு சடலத்தின் மீது தடயவியல் சோதனை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து போலீசார் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்ட அந்த பயணப்பெட்டியை மீட்டுள்ளனர். அவ்விடத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையிட்ட போது, எந்தவொரு அடையாள ஆவணத்தையும் கண்டு பிடிக்க இயலவில்லை என்று தெரிவித்தார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலையாக வகைப்படுத்தப்பட்டு, தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








