'குளோபல் சுமுத் புளோட்டிலா' எனும் மனிதாபிமான உதவிப் பயணத்தின் போது, இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 மலேசியர்களை உடனடியாக விடுவிக்க மலேசியா தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடல் பகுதியில் இந்த உதவிப் பயணத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள பிரதமர், இது கடல்சார் சட்டங்களை மீறும் ஒரு 'கடற்கொள்ளை' போன்ற செயல் என்று விமர்சித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களை விடுவிக்க நட்பு நாடுகளுடன் இணைந்து மலேசியா பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களைப் பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதே தற்போதைய முன்னுரிமை என்றும் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.








