சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளப் பேரிடர் மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தினார்.
"சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் உரையாற்றிய பிரகாஷ், ஷா ஆலாம் ஸ்ரீ மூடா உள்ளிட்ட பிற பகுதிகளில் நிலவும் தொடர் வெள்ளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த யோசனை தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீடு இருந்தும் நிலம் கையகப்படுத்துதல் போன்ற நிர்வாகத் தாமதங்களால் திட்டங்கள் முடங்குவதை சுட்டிக்காட்டிய பிரகாஷ், அவசரத் திட்டங்களுக்கு 14 நாட்களுக்குள் தற்காலிக அனுமதி வழங்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தக் கோரினார்.
மேலும், கோத்தா கெமுனிங் பகுதியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், பொது போக்குவரத்துச் சேவையை விரிவுபடுத்தவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை முஸ்லிம் அல்லாதார் விவகாரங்களை நிர்வகிக்க சிலாங்கூர் மாநிலத்தில் தனி வாரியம் ஒன்றை அமைக்கவும் அவர் முன்மொழிந்தார்."








