கோத்தா பாரு, ஜனவரி.29-
கிழக்கு கரையோர இரயில் இணைப்பான ECRL ரயில் திட்டத்திற்கான பயணக் கட்டண விகிதங்கள், தரை பொது போக்குவரத்து முகமையான APAD ஒப்புதல் அளித்த பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறுகையில், கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு முன் சந்தை ஆய்வு செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படவுள்ள இந்த இரயில் சேவையின் முழுமையான செயல்பாட்டிற்கு முன்னதாகவே கட்டண விபரங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
"தற்போது எங்களது முழுக் கவனமும் கட்டுமானப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு அமைப்புகளை முழுமையாக நிறைவு செய்வதிலேயே உள்ளது," என்று அவர் கிளந்தானின் துஞ்சோங்கில் உள்ள கோத்தா பாரு ECRL நிலையத்திற்கு வருகை தந்த போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் Malaysia Rail Link Sdn Bhd தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ தர்விஸ் அப்துல் ரசாக் உடனிருந்தார். ECRL ரயில் திட்டமானது, கிளந்தான் தும்பாட்டையும், சிலாங்கூர் கோம்பாக்கையும் இணைக்கும் பெரும் ரயில் திட்டமாகும்.








