தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது மனிதர்களைப் போன்ற காட்சி வடிவமைப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட கட்டமைப்பு பாதுகாப்பானது என்றும், அதில் காணப்படும் லேசான அசைவு, அதன் வடிவமைப்பில் உள்ள இயல்பான நெகிழ்வுத்தன்மையால் ஏற்பட்டது என்றும் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் மேடை அசைவதாக வெளியான காணொளி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புத்ராஜெயா மாநகராட்சி அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாளத்திற்கு ஏற்ப அசையும் வகையில் மனித உருவ காட்சி இருப்பதால், மேடை முழுமையான இறுக்கமாக இருக்க முடியாது என்றும், தேவையான அளவு நெகிழ்வுத்தன்மை பாதுகாப்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஃபஹ்மி ஃபட்சில் விளக்கமளித்துள்ளார்.

மேலும், கட்டிடம் மற்றும் அணிவகுப்பு பாதை ஒரே அச்சில் இல்லாததால் சில கோணங்களில் மேடை மையத்திலிருந்து விலகியதாகத் தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தில் 2,000 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 1,500 ஆக குறைக்கப்பட்டதால் இந்த தோற்றம் அதிகமாகத் தெரிகிறது என்றும், எதிர்காலத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்படும் என்றும் ஃபஹ்மி ஃபட்சில் விவரித்துள்ளார்.








