கெப்போங் பகுதியில் உள்ள டேசா பார்க் சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவரும் அவரது இரு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், அப்பெண்ணின் கணவர் அதே அடுக்குமாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்.
உயிரிழந்தவர்கள் 47 வயதான பெண், அவரது 9 வயது மகன் மற்றும் 7 வயது மகள் என கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாதில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
தாய் மற்றும் இரு குழந்தைகளும் அவ்வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் கிடந்ததாகவும், மூவரின் கழுத்துப் பகுதியில் கடுமையான காயங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தியொன்றும் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை மற்றும் திடீர் மரணம் என்ற இரு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.








